இயக்குவது Blogger.
|2013 சென்னை புத்தகக் கண்காட்சியில் தோழமை வெளியீடாக: 'எதற்கு ஈழம்', எழுநா வெளியீடாக: 'கிளிநொச்சி போன்தின்ற நகரம்', நியூ செஞ்சரி புக் ஹவுஸ் வெளியீடாக:'PRAY FOR MY LAND' ' முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.| தொடர்புகளுக்கு deebachelvan@gmail.com

புதன், 29 மே, 2013

பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை


ஒரு பாலகனாகவே இருந்தைத்தவிர
வேறெதையும் செய்வில்லை 
ஒட்டிய வயிறுடன்
நிராயுதமான களத்தில் அணிந்திருந்த காற்சட்டையையும்
முடியிருந்த போர்வையையும் தவிர வேறெதுவுமில்லை

இனியொரு பாலகரின் கண்களை எப்படிப் பார்ப்பது?

ஏதுமறியாப் பாலகர்கள்
இம்மண்ணில் பிறந்திருந்தைதவிர
வேறெதையும் செய்திருக்கவில்லை 

தனித்துப் பிடிபட்ட சிறுவனிடம்
ஏக்கம் மிகுந்த இரண்டு கண்கள்மட்டுமே இருந்தன

குற்றங்களால் நிரம்பியிருந்த வானத்தில் 
ஒரு பறவையும் இல்லை
பதுங்குகுழியில் பிறந்த குழந்தை
பதுங்கு குழியிலேயே கொல்லப்படுகையில் 
எஞ்சியது ஒன்றுமில்லை 

இப்பூமியில் மீண்டும் புற்கள் முளைக்குமா? 

நெஞ்சில் இரும்புத் துப்பாக்கிகள்
அப் பாலகன் இறுதிக் குரலெடுக்கையில்
உடைந்த நிலவைத்தவிர 
எந்தச் சாட்சியுமில்லை

20.02.2013 

தீபச்செல்வன்

நன்றி: நேர்காணல் இதழ்

செவ்வாய், 7 மே, 2013

ஓரிடம்



தேடப்பட்டவனைக் காணவில்லையென 
கேட்டுக் கொண்டே செல்பவர்
நேற்று முழுவதும் கதவை பூட்டியிருந்தார்

வாடகைக்கு தங்கியிருந்த
ஒரு கவிஞனிடம் வார்த்தைகள் மட்டுமேயிருந்தன

ஓரிரவில் பூட்டப்பட்ட கடையின் முன்பாக
நாய்கள் சலம் கழிக்குமிடத்தில்
உறங்கவிருக்கும் மனிதனுடன் பேசிக்கொண்டே
ஒரு இரவை முடித்திருக்கும் சில நேரங்களில்
குழந்தையைப்போல அழுதுகொண்டே நடக்கையில்
யாருமில்லை

வார்த்தைகளுக்காய்த் தண்டிக்கப்படும் ஒரு கவிஞன்
திறக்கப்படாத கதவுகளைத் தட்டுகையில்
வைக்க இடமற்றிருக்கும் பொருட்களைவிடவும்
மிகப் பாரமாயிருந்தது இதயம்

அழைக்க விரும்பாத நண்பர்கள்
வெளியேறிச் செல்லும்பொழுது
பார்த்துக் கொண்டே நின்றனர்
விடைபெறும்பொழுது
யாதொரு கையும் அசைத்தனுப்பவில்லை

குடியேறிச் சில நாட்களிலேயே
வெளியேறச்சொல்லும் பொழுது
ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்கக்கூடாதவன்
என்று வாசலில் வெளியேற்றக் காத்திருக்கும்
யாரோ ஒரு அம்மா
தன் பிள்ளையைப் போலவும் நினைக்கவில்லை

சூரியன் உதித்திராத அதிகாலையில்
கையில் கிடைத்த பொருட்களுடன்
பூமியில் ஓரிடம் தேடி
யாருமற்றவனாய்
நகரத்தைவிட்டுப் பெயர்ந்து செல்லும்பொழுது
எதிரில் யாதொரு வண்டியுமில்லை

ஒரு கவிஞன் நாட்டைவிட்டுத் தப்பியோடினான்!

தீபச்செல்வன்

கணையாழி மே 

திங்கள், 8 ஏப்ரல், 2013

ஒரு குழந்தையை பலியிட்டதன் பின்னரான புரட்சி



பலியிட முன்பாக விட்டுச்செல்லப்பட்ட
ஒரே ஒரு பார்வையில்
தன் சாட்சியை வழங்கிற்று அக்குழந்தை

கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு
துப்பாக்கிகளின் முன்பாக
இருத்தப்பட்ட  குழந்தைகளிடம்
பொம்மைகள்கூட இல்லை

ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்களில்
மலர்ந்திருக்கிறது அல்லிப்பூ

ஓரினம் அழித்துத் துடைக்கப்பட்ட நாளில்
எதுவும் முடிந்திருக்கவில்லை
எதனையும் முடி மறைக்க முடியாதபடி
எதையே விட்டுச்சென்றது அக்குழந்தை

நஞ்சூட்டப்பட்ட இறுதி உணவோடு
பூமியின்மீதான கடைசிப் பார்வையைச் செலுத்துகையில்
அடுத்த தலைமுறையை
புரட்சிக்கு அழைக்கும் முதல் குழந்தையாயிருந்தது

குழந்தைகளுக்காகவே யுத்தம் செய்தோம்
யுத்தத்தைத் தவிர ஏதுமறியாக் குழந்தைகள்
திரும்ப வேண்டுமென காத்திருக்கிறது இப்பூமி

வாழத் தொடங்கும் ஒரு குழந்தையை கொல்லுகையில்
அதன் கடைசிப் பார்வையிலிருந்து தொடங்கிற்று புரட்சி

அழிந்துகொண்டிருக்கும் தேசத்தை
மீண்டும் துளிர்க்கச் செய்கிறது
ஒரு குழந்தையைப் பலியிட்டதன் பின்னரான புரட்சி!


தீபச்செல்வன்

நன்றி: குமுதம்


சனி, 9 மார்ச், 2013

இரும்புக்காட்டின் பூக்கள்



வண்டிகள் எல்லாம் இரும்புக் குவியலாயிருக்க
சக்கரங்களும் இல்லை
ஓட்டமும் இல்லை
துருப்பிடித்த பறவைகளின் நிழல் கவிந்த
யாருமற்ற இடுகாட்டில்
பிஞ்சுத் தலைகளின்மீது இரும்பு மூட்டைகளைச்
சுமக்கின்றனர் சிறுவர்கள்

இரும்பு படிந்த உடல்களிலிருந்து
உதிர்கிறது துருவேறிய துகள்கள்
மலிவான சிறுவர்கள் 
எவ்வளவு பாரமேனும் சுமப்பார்களென
விலைக்கு வாங்கப்பட்டனர்
வெடிக்காத குண்டுப் பொறிகளுக்குளிருக்கும் 
இரும்பை கொண்டு வருவார்களென
இரும்புக்காட்டில் தொலைவுக்கு அனுபப்பட்டனர்

அழுகிய இரும்பை நெறுக்கும்
தராசுகளுக்குள் உறங்கி எழும் சிறுவர்களிடம்
இருந்தவை இரும்புகளைவிட பாரமான கண்கள்

கால்களுக்கு கீழேயும் தலைக்கு மேலேயும்
வெடிகுண்டுகள் நிறைந்திருக்க
சிறுவர்கள் உள் நுழையும்பொழுது
இரும்புக்காட்டில் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்துக்கொண்டு 
உக்கிய பேரூந்தையும்
உருட்டிச் செல்லுகின்றனர் யாரோ!

தீபச்செல்வன்

நன்றி: கல்கி

புதன், 6 மார்ச், 2013

மெரீனாக்கரை




மெரீனாவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
தேனீர்க் கோப்பையுடன் எதிர்பார்த்திருக்கும் அம்மாவை 
பெயர்ச்சியால் கவிந்த வானம் இருண்டுபோக
புலம் இழந்த பறவைகள் அலைகின்றன
நேற்றும் ஊரிலிருந்து சில நண்பர்கள் 
படகெடுத்து பெருங்கடலின் வழியே சென்றனர்

எனது நகரத்தின் மரநிழலில் நடப்பதுபோலவும்
எனது தெருவில் சைக்கிளை ஓட்டுவதுபோலவும் 
எதுவுமில்லை 
யாருக்கும் புரியாத பேச்சோடு
எதிரில் யாருமற்றிருந்தேன் 
வெடிப்பதுபோல ஊதும் இருதயம் முழுவதும் தாய்மண். 
கனவுகள் காய்க்கும் பனைமரக்காட்டிலிருந்து 
வேர் அறுத்த மரமாய்
சென்னை நகரத்திற்குத் தூக்கி எரிந்தது யார்?
மண்ணிழந்து வாடத் தொடங்கிற்று செடி
தாய் மண்ணைப் பிரிய
தேம்ஸ் கரைபோல இலையுதிர்காலத்தில் 
அசைவற்று இருக்கிறது மெரீனாக்கரை
காற்று எங்கோ இழுத்துச் செல்லுகிறது பறவைகளை
நள்ளிரவில் கண் விழிக்கச் செய்யும்படி
மெரீனாவுக்கு மேலால் தாழ இறங்கி 
கத்திச் செல்கின்றன சில வலசைப் பறவைகள்! 

தீபச்செல்வன் 

நன்றி: தீராநதி மார்ச் 2013

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கொலை பூமி




வென்றவர்கள் கைப்பற்றியாளும் பூமியில் 
தோற்ற பூர்வீகச் சனங்களை 
அழிவுக்கு பரிந்துரைத்திருக்கிறான் அரசன்
காயங்களுககு உள்ளான புன்னகையையும்
சிதறுண்ட கைகளின் சின்னத் துண்டுகளையும்
யுத்த அரசன் பிடுங்கிக் கொள்ளுகிறான்
நகரில் கொலை வார்த்தைகளை எரிந்து
பயங்கரங்களை தெருவில் திறந்து
பூமியிலிருந்து நம்மை துடைக்கும்படி
மாபெரும் கட்டளையிட்டு
குழந்தைகளை தடாககங்களில் எறிந்து 
மிரட்டும் நாட்களில் 
ஒரு மருத்துவமனையை சவச்சாலையாக்கினான்
கீரிமலையின் கேணியில்
விஷத்தை கலந்து 
பாவத்தண்ணீராக்கி பூமிக்குப் பாய்ச்சினான்
சனங்களின் பெயரை கொலைப்பட்டியில் எழுதி
நகரெங்கும் வீசியெறிந்தான்
அடிமை கொள்ளப்பட்ட நகரில் 
வென்றவர்கள் யுத்த ஆட்டம் போடுகையில்
தோற்ற நாமோ துயருக்குள் அமிழ்த்தப்படுகிறோம்
யுத்த அரசனோ நமது பூமியை கொலை செய்து 
அடியில் விசமரத்தை நடுகிறான்
நிலத்தோடு எல்லாம் பிடுங்கப்பட்டு 
அழிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட எனது சனங்களே!
கொலை பூமியில் 
குழந்தைகள் இன்னுமா போராட வேண்டும்?

* * *
கணையாழி மார்ச் 2012 


(இக்கவிதைக்கு கணையாழியின் சிறந்த கவிதைக்கான ஆண்டாள் விருது வழங்கப்பட்டிருக்கிறது) 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இருக்கப் பிரியப்படும் இடம்


குளத்தின் மேலாக வட்டமிடும் பறவைகள் இல்லை
துப்பாக்கிகள் தொங்கும் மருதமரங்களின் கீழாக
பேசிக் கொண்டிருக்க யாருமில்லை
ஆஷா! நாங்கள் எங்கு செல்வோம்?

இரவில் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்தபடி
பேசிக் கொண்டு நடந்து வரும் பொழுது
நான் துப்பாக்கிகளில் மோதுண்டேன்
ஒரு தெரு எப்படியிருக்கும்?

கால்களறியாத தெருக்களில் ஏதோ விளைய
அழிவின் நிழலில்
அழகிய தோட்டத்தைக் காண்பீர்கள் என்று
நாம் வாழும் காலத்தைச் சபித்தது யார்?

உண்ணிப் பூக்கள் ப+த்திருக்க
பச்சைப் பாம்புகள் ஈச்சைகளுக்குள் புணர
கைகளுக்குள் சிக்காத காணாங்கோழிகள்
பற்றைகளுக்குள் இருந்து மிரண்டபடி பார்க்க
நீயும் நானும் ஆற்றங்கரையிலிருப்போமா?

ஆஷா! இரத்தம் பட்டு வறண்ட கன்னங்களுக்கு
இனிக்கும் உனது முத்தம் வேண்டும்
என்னோடு நீயும் இருக்கப் பிரியப்படும் இடத்தை
நான் எப்படி இழப்பேன்?

முத்தங்கள் பூத்த கொடிகள்; படரும்
நாவல் மரத்தில் நீ பழங்களைப் பறிப்பாய்
நான் கிளைகளை வளைப்பேன்
பழங்களை உண்ண பறவைகள் திரும்பும்.

நன்றி : தீராநதி ஜனவரி 2013 

புதன், 28 நவம்பர், 2012

விளக்கெரியும் பொழுது


எப்பாடலுமற்று யாரும் வாய்திறக்கா 
நள்ளிரவுகளின் காலத்தில்
இருண்ட தேசத்தில்
சூரியனுக்காய் காத்திருக்க
சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க 
கைகளால் மூட முடியாத 
மழை இடியோடு பெய்கிறது.

வீழும் பொழுது அழுது
மீளும் பொழுது தொழுது
கனவுகள் முட்டும் கல்லறைகள் பெருகிய தேசத்தில்
தாய்மார்களின் அடி வயிறுகளில் 
கார்த்திகைப் பூக்கள் மலர்கின்றன.

வீட்டு மூலையில் விளக்கெரியும் 
கார்த்திகை மாலைப் பொழுதில்
விளக்குகளை தூக்கி வந்து
மழையில் நீர் சொட்டும்
தென்னங் கீற்றுக்களில் ஒளிரும் 
உங்கள் முகங்கள் கண்போம்

மூட முடியா மழை
கொல்ல முடியா மரங்களில் பெய்ய
அழியா முகங்கள் மனங்களில் தெரியும்
அணைக்க முடியா விளக்குகள் 
தேசத்தை நிரப்பியெரியும் அப்பொழுது.

*    *    * 

நன்றி - வானவில், தீராநதி ஜனவரி 2013


சனி, 17 நவம்பர், 2012

குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம்



இங்கும் ஒரு தாயின் அழுகைதான்
நகரத்தை உலுப்புகிறது
குழந்தைகள்தான்
பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர்.

பேரீட்சைமரங்களின் கீழே
பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை
தேடுகின்றதை நான் கண்டேன்.

எனது அம்மாவே நீ எங்கும்
குருதி சிந்துகிறாய்
நமக்காய் குழிகளைக்கூட
வழங்க பிடிக்காத அதிகாரத்திடம்
குழந்தகைள் திரிகிற
நகரம் பலியிடப்படுகிறது.

காஸா எல்லைகளில்
இலங்கைப்படைகள் மோத வருகின்றன
கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள்
முற்றுகையிடுகின்றன.

குழந்தைகள் என்ன செய்தார்கள்?

நமது குழிகளில் கிடக்கிற
குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள்
மேலும் மேலுமாய்
சனங்கள் தோற்றுப்போக
அதிகாரத்தை கடக்க இயலாதிருக்கிறது?

அந்த நகரமும்
எரிந்துகொண்டுதான் இருக்கிறது
குழந்தைகள்தான் உலகத்திடம்
பலிவாங்கப்படுகிறார்கள்
தாய்கள்தான் விலைகொடுக்கிறார்கள்.

சிதைந்த சுவர்களினிடையில்
இன்னும் நுழைய
காத்திருக்கும் விமானம்
எனக்கு மேலால் அலைந்து திரிகிறது.

விழப்போகிற குண்டுகளிடமிருந்து
தப்புவதற்கு அலைகிற நம்மைபோலான சனங்களின்
குழியிலிடப்படுகிற நகரத்தில்
நானும் நசிந்து கிடக்க
காயங்களால் நீ அழுகிறாய்.

பாலஸ்தீனக் குழந்தைகளை
பலியிட அலைகிற
இலங்கை இராணுவத்தளபதி
வழிநடத்துவிக்கிற
காஸா எல்லையில் ராங்கிகள் முன்நகருகின்றன.

நகரத்துள் படைகள்
நுழைந்து குழந்தைகளை தேடுகிறபோது
நமது நகரத்தின்
அதே அழுகை ஒலி கேட்கிறது.

நெருப்புப்பிடித்து எரிகிற நகரத்தில்
அதன் புகையிடையில் நமது முகங்கள்
கிடந்து கறுப்பாகின்றன.

விமானங்கள் நகரத்தை
முழுமையாய் தின்று களிக்க
சாம்பலில் பிறண்டு அழுகிற தாயிடம்
நமது நகரத்தின் அதே
குருதிச்சொற்கள்தான் இருக்கின்றன.

01.01.2009

தீபச்செல்வன்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அகதியின் பள்ளிக்கூடம்


அகதிமுகாமாக்கப்பட்ட பள்ளியின்
கதிரை மேசைகள் அள்ளியேற்றப்பட்ட
ஒருநாள் புத்தகங்கள் தொலைந்துபோயின
யாரும் திரும்பாத காலத்தில்
போர்க்களத்தில் நிற்கையில்
காயங்கள் மிகுந்த பள்ளியின் மணியை அசைத்திருப்பாயா?
நொந்த உள்ளத்தோடு கிழிந்த சீருடைகளுடன்
நான் அகதியான பொழுது
நிமிர்ந்திருந்த நம்; பள்ளியும் அகதியானது
ரொட்டிகளை பரிசளிக்கும் பசியாறும் கதைகளை
படித்த மரநிழலின் நினைவுகளை பொழியும்
சேலைகள் கட்டப்பட்ட
மரங்களாலான வீடுகளில்
என்னிடம் புத்தகங்கள் இருக்கவில்லை
அகதி முத்திரை குத்தப்பட்ட பள்ளிக்கு
உன்னைப்போலவே எந்தத் தோழர்களும் திரும்பவில்லை
யாரும் திரும்பாத வகுப்பறையில்
பாடல்கள் ஒலிக்கவேயில்லை
பேரீட்சைப் பழங்களில்லை
ஒட்டகங்களில்லை
எண்ணெய் கிணறுகளில்லை
சிறுவர்கள் சாகடிக்கப்படும் யுகத்தில்
ஒரு பாலஸ்தீனச் சிறுவனைப்போல
நான் ரொட்டிக்கு அலைந்தேன்
இறுதிவரை
கிழிந்த என் அகதிப் புத்தகப் பையிற்குள்
உனக்காக சில ரொட்டித் துண்டுகளிருந்தன.

தீபச்செல்வன்

*** 
நன்றி - மலைகள் இணைய இதழ்

திங்கள், 3 செப்டம்பர், 2012

பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

தீபச்செல்வன்
     
மணற்ப்படுக்கைகளில் எழுதப்பட்டு விதைபட்ட
உன் கவிதைகளும் கதைகளும் மூடுண்டு கிடக்கின்றன
நண்பனே! பாலி ஆறு எப்படி இருக்கிறது?
என்ற உனது முதலாவது வார்த்தையிலேயே
தாங்க முடியாத என் பதில்கள் உதிர்கின்றன
நமக்கொரு பெரிய கனவு இருந்தென்பதை
வரலாற்றில் பரப்பிச் செல்லும்
பாலியாறு என்ன தவறிழைத்தது?

நண்பனே நீ கண்ட கரையினில் பெண்கள் யாருமில்லை
வீழ்த்தும் கைகளை மீறி நணல்கள்
எழும்பிக் கொண்டிருக்கின்றன
மீன்கள் வெளியில் வருவதுமில்லை துள்ளுவதுமில்லை
யாருடைய கால்த்தடங்களுமில்லாத
பாலி ஆற்றங்கரை இருண்டு கிடக்கிறது
ஆற்றங்கரை மரங்கள் சலசலத்து
மண்ணின் கவிதைகளை பாடிக் கொண்டேயிருக்கின்றன.

குருதியை நிலத்திலிருந்து துடைத்து ஆற்றில் எறிந்திருக்கிறார்கள்
பாலி ஆறு நெளிந்தபடி கடலைத் தேடுகிறது
உடல் பரிசோதிக்கப்பட்டு
அனுமதிபெறப்பட்டு
கால் நனைத்து முகம் நனைக்கையில்
நம்மோடு இந்த ஆறும் அடிமையாயிருந்தது.

மருது மரங்கள் துயர்க்கோலமாய்
வளர்ந்து கிளைகளை வீசியிருக்கின்றன
யாரும் உள் நுழைய முடியாதபடியிருக்க
ஆறு தனித்து துயரோடு நீண்டு செல்கிறது.

பச்சை சமையல் பாத்திரங்கள் கழுவப்படும்
ஆறாய் அடங்கிக் கிடக்கிறது
துப்பாக்கிகளின் நிழல் விழுந்து அடக்கி
நீரோட்டத்தை குழப்பும் ஆறாய்க்கிடக்கிறது
பச்சை உடைகளும்
பச்சை சுவர்களும்
பச்சை முகாங்களும் பச்சை காவலரண்களும்
மூடியிருக்க ஆற்றங்கரையினில் பறக்கின்றன
ஆற்றில் துவைக்கப்பட்ட பச்சை உடைகள்.

ஒட்ட முடியாத பச்சைகள் மதிக்கின்றன
செழித்து நமது வரலாறு பரவிப் பாயும் ஆற்றின்
வலிமையையும் நீட்சியையும்
நாம் மீண்டும் பெறுவோமா?
மீண்டும் நாம் நீந்தி மூழ்க முடியுமா?
பாலி ஆற்றுப் பக்கமாக தாகத்தோடு
சில குழந்தைகள் தண்ணீர் கோப்பைகளை
இறுகப்பிடித்து குடித்துக் கொண்டிருந்தனர்.

அசையாத மணிகளும் யாருமற்ற பல வீடுகளும்
தயங்கி விளையும் பயிர்களும்
துரத்தப்பட்ட மனிதர்களைத்தான் தேடுகின்றன.

நீ வருவாயா உன் கவிதைகள் விளைந்த
பாலியாற்றில் நீந்திச் செல்ல?
மூட முடியாது விரியும்
தடுக்க முடியாது நீளும் பாலியாறு
இன்னும் மெல்ல மெல்லவாக
நகர்ந்து கொண்டுதானிருக்கிறது எனினும்
பாலி ஆறு ஏன் அடிமையாக்கப்பட்டது?

பின்குறிப்பு : 

'பாலியாறு நகர்கிறது' என்பது ஈழக் கவிஞர் ஜெயபாலன் 1968இல் எழுதிய அவருடைய முதல் கவிதை. இக்கவிதைவன்னியில் மல்லாவியில் உள்ள பாலியாற்றை பற்றியது. ஜெயபாலன் வன்னியில் மல்லாவியில் வாழ்ந்து தற்பொழுது புலம்பெயர்ந்து வாழ்கிறார். வன்னியின் வளத்திலும் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறும் பாலியாற்றை தற்பொழுது இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இராணுவத்தின் வசம் வீழ்ந்துள்ள பாலியாற்றுக்கு 2011இல் சென்ற பொழுது ஜெயபாலனை விழித்து எழுதியது

-பூவரசி 2012 ஜனவரி

சனி, 25 ஆகஸ்ட், 2012

மணல் வீடு

தீபச்செல்வன்

குழந்தைகள் வீடுகளை மறந்துபோனார்கள்
மணலில் பிறந்து விளையாடி
உறங்கிக் கிடக்கையில் கனவில்
நமது தேசத்தைப் பற்றி
பேசிக்கொள்கிறார்கள்
பெரும் மழையும்
கொடும் புயலும் அடித்த அழிவுக்காலத்தில்
நமது தேசம் அழிந்து போனது
குழந்தைகள் மணலில் வரைந்த
கதைகள் கொல்லப்பட்டன
அழிக்கப்பட்ட தேசத்தின்
குழந்தைகளின் கைகளுக்குள்
உதிராத மணல்வீடுகள்
இறுகிக் கிடக்கின்றன
அழிவை கட்டி எழுப்பிய தேசத்தில்
இந்தக் குழந்தைகளுக்கு எதைக்காட்டுவது?
பாதிச் சூரியனை
தலையில்லாத மரங்களை
கிடங்குகள் விழுந்து சிதைந்த நிலத்தை
பொம்மைகள் இறந்து கிடக்கும் வெளியை
பார்க்க ஏன் இவர்கள் இங்கு பிறந்தார்கள்?
தாங்கள் வாழ விரும்பும் தேசத்தை
மணலில் வரைந்திருக்கிறார்கள்.

நன்றி - மல்லிகை ஆண்டு மலர்

நினைவை கொல்லும் மிருகம்

தீபச்செல்வன்

நினைவைக் கொல்லும் மிருகம்
ஓரிரவில் பெருநகரைத் தின்று முடித்தது
அந்த மிருகத்தின் வாயில்
நினைவுகள் கொல்லப்பட்டு விழுங்கப்படுவதை
நாம் பார்த்துக் கொண்டேயிருந்தோம்
கனவை ஊடுருவிச் சென்று
மனதின் ஓரங்களில் சொருகப்பட்டு
கிடந்த நினைவுகளை எல்லாம்
தின்று விடுகிறது
கதைகள் எழுதப்பட்ட கற்களையும்
குழந்தை சித்திரங்களை வரைந்த சுவர்களையும்
தின்று கொண்டே
நமது மூதாதையர்களின் நினைவுகளை
எல்லாம் கொன்று போடுகிறது
அது மெல்ல மெல்ல
எல்லாவற்றையும் தின்றுகொண்டிருக்கிறது.
அது பசியெடுத்து அலறுகையில்
வார்ததைகள் நடுங்குகின்றன
தீன் தேடி வருகையில்
பூர்வீக கட்டிடங்கள் துடிக்கின்றன
கொடும் இரவில் நிலவைத் தின்ற மிருகம்
காலத்தை இழுத்துத் தின்கிறது.

நன்றி - மல்லிகை ஆண்டு மலர்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

யுத்தக்கல் சுமக்கும் சிறுவன்



தீபச்செல்வன்

ஒற்றைக்காலுடன் இழுத்துச் செல்லும்
சிறுவனுக்காய் திறக்கப்பட்டிருக்கிறது 
குண்டுகள் கொட்டப்பட்டு குழிகள் வீழ்ந்த நகரம்
செல்துளைத்த ஓட்டைக்குள்ளால்
பள்ளியிலிருந்து பார்த்த பொழுது
அழிவில் முழுநகரும் தோய்ந்திருந்தது
வலிக்காத கால்களுடன் நகரத்தில் திரிகையில்
ஒரு கையில் அம்மாவும் மறுகையில் அப்பாவும் இருந்தனர்
யாருமற்ற நகரில் ஊன்றுகோல்களை அவன் பிடித்திருந்தான்
கால்களற்ற சிறுவர்கள் தவழ்ந்தலையும் கனவு நகரில்
விளையாடும் குழந்தைகளில்லை
குழந்தைகளின் பூங்காவில் யுத்தக் கல் நிறுத்தப்பட்டிருந்தது
கால்கள் முதல் எல்லாவற்றையும் இழந்த
குழந்தைகளுக்கு தோல்வியை நினைவுபடுத்தும் யுத்தக்கல்
விழுந்தது காலற்ற சிறுவனின் முதுகுமீது.

நன்றி - கல்கி ஆகஸ்ட் 2012

புதன், 15 ஆகஸ்ட், 2012

பாடலற்ற நிலம்

தீபச்செல்வன்

நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள்
இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள்.

எங்களுக்கு ஒரு கனவு இருந்தது
எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது
எங்களுக்கு ஒரு நாடு இருந்தது
அப்பொழுது எங்களுக்கு ஒரு கொடியும் பாடலும் இருந்தது.

இன்று எங்கள் நகரத்தில் அந்நியக் கொடி பறக்கிறது
எங்கள் நிலத்தில் அந்நியப் பாடல் ஒலிக்கிறது
அன்று எங்கள் நகரத்தில் எங்கள் கொடிகள் பறந்தன
எங்கள் நிலத்தில் எங்கள் பாடல் ஒலித்தது.

அன்று எங்களுக்கு காவல் இருந்தது
இன்று நாங்கள் காவல் இழந்திருக்கிறோம்
அன்று எங்களுக்கொரு தலைவன் இருந்தான்
இன்று எங்களுக்கு யாருமில்லை!

0

நன்றி - யூனியர் விகடன் 

காவல் இழந்த நிலம்

தீபச்செல்வன்


எதுவும் திரும்பியிராத காலத்தில்
தலைவனற்ற நிலத்தில்
காவலை விழுங்கும் அரண்களுக்குள்
சனங்கள் வசிக்கின்றனர்
இராணுவமுகாங்களுக்குள் வீடுகள் இருக்க
நிலமெங்கும் துப்பாக்கிகளின் நிழல் அடர்கிறது
புன்னகையிலிருந்து இரத்தம்வரை
எல்லாவற்றையும் உறிஞ்சும்
துப்பாக்கிகள் தெருக்களை ஆள்கின்றன
கிராமங்களில் நிரப்பட்ட யுத்த ஆயுதங்களும்
நகரங்களில் பறக்கும் இராணுவக் கொடிகளும்
சனங்களின் பூமியைக் கொல்கின்றன
கோயிலின் கோபுரங்களில் சப்பாத்துக்கள் ஏறியாட
ஆறுகளில் இராணுவ வண்டிகள் குதித்தெழும்ப
மரங்களில் இராணுவ உடைகள் போர்க்கப்பட்டிருக்க
எல்லாம் கொல்லப்பட்டன
சுற்றுலா தேசத்தின் காட்சிகள் விளம்பரமாக
கடதாசித் தலைவர்கள்
போர் தின்ற சனங்களின்
தலைகளுக்காய் அடிபடுகிறார்கள்
காவல் இழந்திருக்கும் நிலத்தில்
எல்லாம் பறிக்கப்பட்ட
எதுவும் இல்லாத ஒரு காலம் வந்தது
யாரும் கொல்லப்படக்கூடிய
எதுவும் பேசமுடியாத ஒரு காலம் வந்தது
இதற்கு முன்பு இந்த நிலத்தை
யாரோ காவல் செய்திருக்கிறார்கள்.
0

நன்றி - யூனியர் விகடன் 

கடத்தப்பட்டவர்களின் கண்கள்

தீபச்செல்வன்

பூக்களைப் போன்ற எல்லோருடைய கண்களும்
துணிகளால் இறுகக் கட்டப்பட்டு
நசுங்கி இறந்து போயியிருந்தன
பறவைகளின் ஒலியை மாத்திரம் கேட்டுக்கொண்டே
இரத்தப் பொருக்குப் படிந்து
வெடில் மாறாத வழிகளில்
தவிட்டுக் கலர் துணிகளால்
கண்களை இறுகக் கட்டப்பட்டவர்கள்
துடித்துக்கொண்டு திரிந்தனர்
என்னுடைய குழந்தைகளின் கண்களை
மூடிக் கட்டியவர்கள்
இறுதியில் கண்களை பிடுங்கியெடுத்ததை
நான் காணமுடியாதிருந்தேன்
எனது கண்கள் ஒளிபொருந்தியவை என்றும்
காதல் ஊற்றெடுப்பவை என்றும்
சொல்லிக் கொண்டே காதலி முத்தமிடுவாள்
அவளது விரல்களால் இமைகளை கோதி
உதடுகளால் இதழ்களால் உறிஞ்சிய பொழுது
கண்பூக்கள் செழித்து இன்னுமின்னும் சடைத்தன
வெள்ளை நிற வண்டிகள்
மிருகங்களை போல கவ்விச் சென்று
கண்களை மூடிக்கட்டும்பொழுது சூரியன் அணைக்கப்பட்டது
பூக்களைப் போன்ற என்னுடைய கண்கள் உதிர்ந்துபோனது
கைகளுக்கு எட்டிய தூரங்கள் வரை
கூர்மையான துப்பாக்கிகளும்
இராணுவச்சீருடைகளில் பொருத்தப்பட்ட
பதவி நட்சத்திரங்களும் முட்டுப்பட்டன
வியர்த்து வெந்து பல நாட்களாய் கண்டுண்ட கண்கள்
துடிக்கும்படியான எல்லா சித்திரவதைகளின் பின்பாயும்
கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளின் பின்பாயும்
இருண்ட தேசத்தில் அவிழ்த்து விடப்படுகையில் 
என்னுடைய கண்களோடு
நடுத்தெருக்களில் கண்களற்றுத் திரியும்
எனது தேசத்தின் மனிதர்களின்
இறந்த கண்களும் மிதந்து கொண்டிருந்தன
0

திமுது ஆட்டிகல மற்றும் குமார் குணரத்தினத்திற்கு

நன்றி - யூனியர் விகடன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...